எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

லேட் நைட் தூங்குறீங்களா? இத படிங்க முதல்ல..!

மாறி வரும் வாழ்க்கை முறையால் இந்திய மக்களுடைய உறங்கும் நேரம் குறைந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறக்கத்தின் தேவை என்ன? உறக்கம் குறைவதால் என்னென்ன பாதிப்புகள் என்பதை உலக உறக்க தினமான இன்று விரிவாக பார்க்கலாம்.

மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம்தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது, இரவில் நாம் மேற்கொள்ளும் ஆழமான தூக்கம்தான். சரியான தூக்கம் இல்லாமல் யாரும் சிறப்பாக செயல்பட முடியாது. நமது வேலைப்பாடு, உடல்நிலை, சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து நமது தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. சிறந்த தூக்கத்துக்கு, தூக்கத்தின் நேரம் மிக முக்கியம். தூக்கம் தடைபட்டு பின்னர் அதிக நேரம் தூங்கினாலும், தடையில்லாமல் இருந்தாலும் குறைந்த நேரம் தூங்கினாலும் உடலில் பிரச்னைகள் ஏற்பட்டு, பாதிப்புகள் ஏற்படும்.
 
ஒரு சராசரி மனிதன் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்து வல்லுநர்கள். மனித வாழ்வியல் அடிப்படைப்படி குழந்தைகளாக இருக்கும் போது அதிகம் தூங்கும் மனிதர்கள், பின்னர் படிப்படியாக வளரும்போது தூக்கத்தின் அளவு நிலையான தன்மை பெருகிறது. அதன்படி 6 வயது நிரம்பியதுமே நாம் சராசரி தூக்க நிலைக்கு வந்து விடுகிறோம். ஆனால் இந்தத் தூக்கம் மனிதர்களுக்கு வயது முதிர்ச்சி வந்தால் படிப்படியாக குறைந்து விடுகிறது. சரியாக ஒருவர் 8 நேரம் தூங்கிறார் என்றால், அவருக்கு பகல் நேரத்தில் தூக்கம் வரக்கூடாது. அவ்வாறு தூக்கம் வருகிறது என்றால் உடலில் பாதிப்புகள் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

கடினமான பணிகளில் ஈடுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கணினி முன் அமர்ந்து கொண்டு பணிபுரிவதால், அவர்களுக்கு தூக்கத்தில் குறைபாடு ஏற்பட்டு தூக்கமின்மையை உண்டாகிறது. இதன்மூலம் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
 
இரவு நேரங்களில் செல்போனில் பயன்பாட்டால் பலர் நீண்ட நேரம் உறங்காமல் கண் விழிக்கின்றனர். இது நாளடைவில் வழக்கமான பழக்கமாகிறது. ஆனால் இதன்மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. உடல் எடை, மன அழுத்தம், இதய பிரச்சனைகள் உண்டாகின்றன. முறையான உணவு பழக்கத்தை பின்பற்றாமலும், சரியான அளவு தூங்காமலும் இருப்பது மனித உடலின் சர்க்கரை அளவில் சீரற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் மயக்கம், உடல் சோர்வு ஏற்படும். தினந்தோறும் 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவது எலும்புகளை பாதிக்கும்.
பெண்களை பொறுத்தவரையில் தூக்கமின்மை மார்பக புற்றுநோய் உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. நேரம் கடந்த தூக்கம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றது. மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும் நேரம் கடந்த தூக்கம் விளங்குறது. போதிய தூக்கமின்மை மூளைச் சோர்வை உண்டாக்குகிறது. இரவு தூங்காமல் இருப்பது நினைவாற்றலைக் குறைக்கிறது. இரவில் நேரம் கடந்த தூக்கம் என்பது மன அழுத்தம், பதட்டம், கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
தூக்கமின்மையால் இத்தனை பாதிப்புகள் இருக்க, அதிக அளவு இளைஞர்களை கொண்ட நாடான இந்தியாவில் இளைஞர்களின் உறக்கம் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் செல்போனில் விளையாட்டு, தொலைக்காட்சி தொல்லையென முறையான உறக்கம் இல்லாமல் பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் பாதிக்கபடுகின்றனர். தூக்கம் கண்களை தழுவும் நேரத்தில் இரவு வேலை, சமூக வலை தளங்களில் அரட்டை என இரவுப் பறவையாகிவிட்டனர் இன்றைய இளைய சமுதாயத்தினர். மனித ஆரோக்கியத்தையே ஆட்டிப் பார்க்கும் தூக்கத்தைப் பெற முறையான உணவும், உடற்பயிற்சியும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

நிம்மதியான தூக்கத்தைப் பெற நினைப்பவர்கள், அமைதியான, காற்று வசதி நன்கு கொண்ட அறையில் தூங்க வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகள் சரியான நிலையில் இருக்க வேண்டும். காலையில் எழும்போது முகுது வலி, கழுத்து வலி, உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உங்கள் படுக்கை சரியில்லை என அர்த்தம். சத்தம் இல்லாத சுற்றுச்சூழலில் தூங்குவதும் முக்கியம். லைட் வெளிச்சத்தில் தூங்காமல், இருள் நிறைந்த அறையில் தூங்க வேண்டியது அவசியம். வெளிச்சமான அறையில் தூங்கும் நிலை ஏற்பட்டால், கண்களைச் துணியால் கட்டிக் கொள்ளவது பலனளிக்கும். ஆழ்ந்த உறக்கத்திற்கு 20 முதல் 25 டிகிரி வரையான வெப்பநிலை உகந்தது.

 
முறையான நேரப்படி, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும். மன அழுத்தையும் குறைக்க வேண்டும். இல்லை என்றால் தூக்கமின்மை தீராத பிரச்னையாகிவிடும். மன அழுத்தம் குறைவதற்கு யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக