எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்: 2020

விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக கடந்த சில ஆண்டுகளாக, உங்களுடைய சிந்தனை, செயல்திறன் ஊக்கம் ஆகியவற்றை முடக்கிப் போட்டு உங்களை பாடாய்ப்படுத்திய ஏழரைச்சனி இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 24 முதல் முழுமையாக விலக இருப்பதால் 2020 நல்ல வருடமே.

கடந்த காலங்களில் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய மனக் கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். விருச்சிகத்தின் கடந்த
காலத்தை எழுத்தில் எழுத முடியாது. அப்படிப்பட்ட கெட்டநிலை எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் இனி நிதானமாக நல்லபடியாக நடக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும்.

கடந்த சில ஆண்டுகளாக வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு, வேலை பிடிக்காத நிலை, தொழில் சரிவு, கடன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே குறை நீங்கப் பெற்று நிம்மதி அடைவார்கள்.

இன்னும் சிலருக்கு இருந்து வந்த மன அழுத்தம், கணவர் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு, தேவையற்ற வழக்கு, கடன்தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தவை போன்றவைகளும் இனிமேல் நீங்கி, வாழ்க்கை நல்லவழியில் செல்லத் துவங்கும்.

கடந்த சில வருடங்களாக நடந்து வந்த கடுமையான கெடுபலன்களால் சொல்ல முடியாத மனஅழுத்தத்திலும், வேதனைகளிலும், எதிர்காலம் பற்றிய குழப்பத்திலும், இருட்டு அறையிலும் இருந்து வந்த விருச்சிக ராசிக்காரர்கள் வருட ஆரம்பத்திலேயே குறைகள் அனைத்தும் விலகி புத்துணர்ச்சியுடன் கூடிய மனநிலை கிடைக்கப் பெறுவீர்கள்.

கிரக நிலைமைகள் விருச்சிகத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்தப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும். எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்.

உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் ஏற்கனவே நடந்த சம்பவங்கள் புரிய வைத்துவிட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் விருச்சிகத்திற்கு கலக்கங்கள் இல்லை.

குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத் தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.

இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

பொதுவாக சொல்லப் போனால் இளைய பருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.
அரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படலாம். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையில் உயரத்திற்குச் செல்ல முடியும்.

கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத்தரப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மிகவும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது. எனவே இந்த வருடத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள்.
நுணுக்கமான தொழில் செய்பவர்கள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இந்த வருடம் மிகவும் நன்றாக உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக நடப்பதை உணருவீர்கள்.
இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வருமானம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும் சேமிக்க முடியும். இதுவரை நகைகளை அடமானம் வைத்த நிலை மாறி அவற்றை மீட்பதோடு புதிதாக நகை வாங்கவும் முடியும். மூத்த சகோதரசகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

மூன்றாமிடத்தில் சனி இருப்பதால் உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டுதான். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

உங்கள் உடலும் மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இப்போது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைப்பீர்கள்.

ஏற்கனவே திருமணமாகி முதல் வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் எல்லாத்துறையைச் சேர்ந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மிக நல்ல வருடம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக