எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சாம்பார் வடை


மெதுவடை மீது சாம்பார் ஊற்றி வைத்தால் அது தானே சாம்பார் வடை.! இதுக்கெல்லாம் ஒரு பதிவா எனக் கேட்கும் அறுசுவை அறியா குழந்தைகளாக நீங்கள்.! ஆம் எனில் இப்பதிவைப் படிக்காது கடந்து போய் விடவும்.. இல்லை எனில் தொடர்ந்து படிக்கவும்.! பொதுவாக சாம்பார் வடை என்பது மெதுவடை மீது சாம்பார் ஊற்றித் தருவது என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!

கிரிக்கெட் தெரிந்திருந்தால் அதே உதாரணத்தை தருகிறேன்.. நல்ல சாம்பார் வடை என்பது கிரிக்கெட் ஆட்டத்தின் “பிட்ச்” போல.. நல்ல பிட்ச் அமைந்து இருப்பின் அருமையான மேட்ச் ஆடுவது போல.. நல்ல சாம்பார் வடையும் ஒரு பிட்ச் போலவே! திரவத்தை அப்படியே உறிஞ்சும் ஃப்ளோட்டிங் பேப்பர் போல வடை இருப்பது.. நல்ல சாம்பார் வடைக்கு ஓர் அருமையான உதாரணம்..!

அதெப்படி மெதுவடையை ஃப்ளோட்டிங் பேப்பர் போல பொறித்து எடுப்பது?? அந்தளவிற்கு நீங்கள் யோசிக்கவேண்டாம்.. மெதுவடையை சூடாக பொறித்து எடுத்துவிட்டு வெந்த வடைகளை இம்மீடியட்டாக சூடுநீரில் போட வேண்டும்.. 10 நிமிடங்கள் அந்த வடை அந்த வெந்நீரில் ஊறிவிட்டால் நான் சொன்ன அந்த ஃப்ளோட்டிங் ஃபார்மெட் வடைக்கு கிடைத்துவிடும்.. உப்பு சிறிது குறைவாய் பொறிக்கப்பட்ட வடை, 

தன் எண்ணெய் ஆடைகளை குளித்த வெந்நீரில் களைந்துவிட்டு சீராக வெந்நீர் குடித்து உப்பியிருக்கும்.! அதை வில்லன் நடிகர் நம்பியார் போல இல்லாது இரு கையால் பிழிவது போல நசுக்கி.. (காதலியின் இதழ்களை சுவைக்கும் காதலன் போல.. அழுத்திக் கடிக்கக்கூடாது மெல்ல மெல்ல உறிஞ்சவும்) சுத்தமாக அந்த வெந்நீர் வடிந்தபின்பு அதை மக்கன் பேடா போல தட்டில் வரிசையாக அடுக்கி வைக்கவும்.!

ஆம்.! இதோ ஃப்ளோட்டிங் பேப்பர் பதத்தில் மெதுவடை ரெடி.! பிழிந்த அவ்வடையே எதையும் உறிஞ்சும் என்பதால்.. அதன் மீது நீங்கள் ஊற்றும் சாம்பார் எனில் அதை உறிஞ்சி அதே சுவையில் சாம்பார்வடை.! இரசம் எனில் அது இரசவடை.! தயிர் எனில் அது தயிர் வடை. ! சாம்பார் வடைக்கு அம்பானி வீட்டுக் காயான வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கித் தூவுவதும்.. இரசவடைக்கு..

பொறித்த அப்பளம் அல்லது வடகம் நொறுக்கித் தூவுவதும்.. தயிர் வடைக்கு பொன்னிற காராபூந்தியை தூவுவதும் (சில நேரங்களில் கார ஓமப்பொடி) இவையனைத்தும் அதன் சுவையை தனித்துவமாக்கும்.! எப்படி குலாப் ஜாமூன் ஜீராவில் மூழ்கி ஊறி உள்ளதோ அதே போல் வடை சாம்பாரிலோ இரசத்திலோ தயிரிலோ ஊறியிருக்கவேண்டும்.. வெறும் ஸ்பூன் கொண்டு வெட்டினாலே ஐஸ்க்ரீம் போல ஜம்மென..

குலாப் ஜாமூன் போல் கட்டாகும் சாம்பார் வடையே பதத்தில் மிகச்சிறந்தது! சிலர் சாம்பார் வைத்துவிட்டு அதன் பிறகு அதில் வடையை போடுவார்கள் அது சாம்பார் வடையே அல்ல.! ஊறியும் ஊறாமலும் இருக்கும்.. நடுவில் உளுந்த மாவு வெண்ணிறமாய் சிரிக்க ஒருபுறம் கெட்டித்தட்டியும்.. ஒருபுறம் மென்மையாகவும் கோழை எம்.ஜி.ஆர். & வீர சிவாஜி போல டபுள் ஆக்ட்டை கொடுக்கும்..! 

சில நேரங்களில் அது நன்கு ஊறிவிடும், பல நேரங்களில் ரிஷப் பாண்ட் பேட்டிங் போல நம்மை சோதிக்கும்.. வெந்நீரில் ஊறிய வடையை வைத்து போடப்படும் இவ்வடைநீங்கள் சாப்பிடும் இட்லிகளை ஒன்றிரண்டு அதிகப்படுத்தும்.. அனைத்திற்கும் மேல் குழைவானநெய் முந்திரிப் பொங்கலுடன் உண்டால் இன்னும் இரண்டு கரண்டி கூடுதலாக பொங்கலை ருசிக்கத் தூண்டும்.! 

அரைத்துவிட்ட சாம்பாரில் ஊறிய வடை எனில் அஜீரணம் இருப்பவனும் 8 இட்லியோ அல்லது 2 பொங்கலோ சாப்பிடுவான் என்கிறது உணவுப் புராணம்.! நல்ல சாம்பார் வடை.. ஒரு காரம் புளிப்பு சுவையுள்ள கார குலாப் ஜாமூன் போன்றது.. நான் சொன்ன பதத்தில் வடைகளை சுட்டு எடுத்து அதை வெந்நீரில் ஊற வைத்துப் பிழிந்து அதன் மீது அரைத்து விட்ட சாம்பார் ஊற்றி, 2 கரண்டி பசும் நெய் விட்டு காராபூந்தி மற்றும்..

நறுக்கிய வெங்காயம் தூவி சாப்பிட்டால் அதுவே பேரானந்தம்.. இந்த நித்யானந்தத்தை நீங்கள் இன்றே இந்தியாவில் அனுபவித்துவிட்டதால். உங்களுக்கு தென் அமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஆன்மிகத் தீவான கைலாசாவின் குடியுரிமை உங்கள் வீட்டிற்கே தேடி வராது! நீங்களும் அங்கு போகவியலாது.! பி கேர்ஃபுல்.!

“ஆஹா... அடடா இதுவே அசல் சாம்பார் வடை”.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக