எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்: 2020

துலாம்:



துலாம் ராசிக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். இந்த வருடம் இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கு ஆனந்தத்தையும், லாபத்தையும் தரும் என்பதால் உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.

ஏறத்தாழ வருடம் முழுவதும் கேது மிகவும் நல்ல பலன்களை தரும்
வலுவான மூன்றாமிடத்தில் இருக்கிறார். மேலும் அவர் சுபரான குருவின் வீட்டில், குருவின் இணைவோடு இருக்கிறார். இது குரு, கேது இரண்டிற்கும் நல்லவிதமான சேர்க்கை. இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

வருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடம் துலாத்தினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.

ராகு,கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது வலுவான நன்மைகளைச் செய்வார்கள் என்பதால் இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் இந்த வருடம் விலகும். அதேபோல குருபகவான் கேதுவுடன் கேளயோகத்தில் இருப்பது பணப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும் உங்களின் பொருளாதார பிரச்னைகள் இந்த வருடம் தீர ஆரம்பிக்கும்.

ராகு,கேது நிலைகளின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் கேளயோக அமைப்பின் மூலம் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் கிடைக்கும். எனவே ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். எப்படிப் பார்த்தாலும் 2020-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.

செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பணவரவு இருக்கும்.
அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.
நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

உங்களின் மனதைரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

நோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும். சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.

குறிப்பிட்ட சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் இந்த வருடம் நெருக்கடிகள் தோன்றலாம். வேலை தருபவரிடமோ, முதலாளியிடமோ கருத்துவேறுபாடுகள் தோன்றி வேலையை விட்டு விடக்கூடிய சூழல் உருவாகும். எதிலும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

நான்கில் அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்க்கும் சனிபகவான் தொழில் இடங்களில் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழி வகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளும், சங்கடங்களும் இருக்கும். பிள்ளைகளின் சுப காரியங்கள் இந்த வருடம் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு பெரிய தடைகள் உருவாகலாம். சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.

சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

துலாம் ராசி பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

மொத்தத்தில் துலாம் ராசிக்கு திருப்பு முனையான, கெடுதல்கள் நடக்கும் என்று சொல்ல முடியாத புத்தாண்டு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக