எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 19 நவம்பர், 2019

லட்சுமி-சிறுகதை

புருசன் செத்துட்டான்
பொட்டப்புள்ளையை காப்பாற்ற 
புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது லெட்சுமி

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான்
பர்மிசன் யார்கிட்ட கேட்ட
மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு
எதையாவது சொல்லிதினமும் 
ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள்
இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும்....
அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் லெட்சுமி

ஆனால் இந்த
ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா
என நினைத்தால் 
அவன்தான் ஆறஅமர உட்கார்ந்து
நிறைய தின்னுட்டு 
பார்சலும் வாங்கிட்டு போவான்....

என்ன செய்ய ...
புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...
நம்ம தலைவிதி அப்படின்னு
போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்...

என்ன சுவையா சமைத்தாலும்
டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான்
நாலுசனம் வரும் லெட்சுமியின் கடைக்கு...
நாலு வருசம் ஆகியும்
நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை...

தனது
கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து
வாரக்கந்துக்கு பணம் வாங்கி
டவுனுக்குள் கடையை பிடித்தாள்....

ஒரே வாரத்தில் லெட்சுமிக்கு
நம்பிக்கை வந்திடுச்சு 
அப்பாடா... இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா 
கடை வாடகை, கந்துவட்டி போக
நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு
நினைச்சநேரம் ...
மறுபடியும் 
அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்...

வாடி வா ..
இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும்...
இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை...
இன்னிக்கு சாப்பிட்டதுக்கு 
இப்பவே காசைக்குடுடான்னு
சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்...

இந்தாம்மா லெட்சுமி..
இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு
நாலு வருசம் நான் உன்புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்..

உன்புருசன் என்னோட படிச்சவன்தான்
புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம்
நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால்
உன்னோட பாதுகாப்புக்காகத்தான்
நான் தினமும் அங்கே வந்தேன்...
நான் கொடுக்கும் இந்தப்பணம்தான்
புளியமரத்தடிக்கடையின் லாப பணம்...
வச்சிக்கோ....கையில் கொடுத்தான்

லெட்சுமிக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே  தெரியவில்லை...
கடைசியாகச்சொன்னாள்...

வாங்க ....சாப்பிடுங்க.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக